அண்டா பாலில் அபிஷேகம் கேட்ட சிம்பு: களமிறங்கிய ரசிகர்கள்; வைரல் வீடியோ!

அண்டா பாலில் அபிஷேகம் கேட்ட சிம்பு: களமிறங்கிய ரசிகர்கள்; வைரல் வீடியோ!

திருச்சி: நடிகர் சிம்புவின் வேண்டுகோளின்படி அவரது ரசிகர்கள் சிம்புவின் பேனருக்கு அண்டாவில் பால் ஊற்றிய  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,’ வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும் அன்று பால் அபிஷேகம், பெரிய கட் அவுட், பேனர் எல்லாம் வேண்டாம். அதற்கு பதிலாக உங்களுடைய அம்மாவுக்கு புடவை, அப்பாவுக்கு சட்டை, சகோதர சகோதரிகளுக்கு முடிந்ததை செய்யுங்கள் எனத் தெரிவித்திருந்தார். ஆனால்  இது குறித்து நெட்டிசன்கள், உங்களுக்கு தான் ரசிகர்களே இல்லையே என்று  கிண்டல் செய்யக் கடுப்பான சிம்பு மீண்டும் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

அதில், ‘இதுவரைக்கும் நீங்க வைக்காத அளவுக்கு பிளெக்ஸ், கட் அவுட் வைக்கிறீங்க. பால் எல்லாம் பாக்கெட்டில் பத்தாது, அண்டாவில் கொண்டு வந்து ஊற்ற வேண்டும். வேற லெவலில் செய்றீங்க. இதுதான் நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்’ என்று கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழி லாளர்கள் நலச் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததோடு  காவல் ஆணையர் அலுவலகத்திலும், புகார் அளித்தனர்.

இந்நிலையில், திருச்சியில் சிம்புவின் ரசிகர்கள் அவரது பேனருக்கு அண்டாவில் பால் அபிஷேகம் செய்து அந்த வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில், திருச்சி ரசிகர்களின் அண்டாவில் பால் ஆரம்பம். இது சும்மாதான். பிப்ரவரி ஒன்று தான் பார்க்க போரிங்க சிம்பு ரசிகர் ஆட்டத்தை என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது.

Share this story