நடிகர் பிரபாஸ் 4 கோடி நிதியுதவி: குவியும் பாராட்டு!
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 199 நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. உலகம் முழுவதும் 5 லட்சத்து 29 ஆயிரத்து 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 24,065 பேர் பலியாகி உள்ளனர் . இந்தியாவைப் பொறுத்தவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 16ஆகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 633 ஆகவும் அதிகரித்துள்ளது. இதில் 44 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசுக்கு உதவும் வண்ணம் தெலுங்கு நடிகர் பிரபாஸ் 4 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளார். மத்திய அரசுக்கு 3 கோடி நிதியுதவியும், ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநில அரசுக்கு தலா 50 லட்சமும் தந்துள்ளார். இதுவரை யாரும் அளிக்காத தொகையை அளித்துள்ள பிரபாஸுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.