பாரதிராஜாவின் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. தொடர்ந்து பாலு மகேந்திரா, மணிரத்னம் ஆகிய பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். அது ஒரு கனாக்காலம், தோட்டா, மலைக்கோட்டை, ஆறுமுகம், ராவணன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் அமீர் இயக்கிய ‘பருத்தி வீரன்’ படம் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர். அவரது முத்தழகு கதாப்பாத்திரம் வெகுவாக பாராட்டப்பட்டது. பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தது போலவே மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் பிரியாமணி நடித்து வந்தார். அனைத்து மொழிகளிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். புகழ் பெற்ற தென்னிந்திய கதாநாயகியாக இருந்தபோதே கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபாராஜ் என்ற தொழில் அதிபரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வெள்ளித்திரையில் தொடர்ந்து தன் நடிப்பு திறமையை காட்டிய பிரியாமணி, அங்கு வாய்ப்புகள் குறையவே ‘தி பேமிலிமேன்’ என்ற வெப் தொடரில் நடித்தார். அதன்மூலம் மீண்டும் ரசிகர்களிடம் இருந்து அதிக பாராட்டை பெற்றார். தற்போது ‘அதீத்’ என்ற மற்றொரு வெப் தொடரில் ராணுவ அதிகாரியின் மனைவியாக நடித்து வருகிறார். அதனைத்தொடர்ந்து தெலுங்கில், ராணாவுடன் இணைந்து ஒரு படத்திலும், இந்தியில் அஜய் தேவ்கன் ஜோடியாக மைதான் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று நடிகை பிரியாமணி தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து தெலுங்கில் ராணாவுடன் அவர் நடித்துவரும் ’விரதபர்வம்’ படத்தின் போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப்படத்தில் அவர் நக்ஸலைட்டாக நடித்து வருகிறார். தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டரிலும் அவருடைய லுக்கே இடம்பெற்றிருக்கிறது.
90களில் நடப்பது போல எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ராணா போலீஸாகவும், சாய் பல்லவியும் நக்சலைட்டாக நடிக்கின்றனர். இதுவரை பார்க்காத விதத்தில் ப்ரியாமணியும் மிக வித்யாசமாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்த்து பல மடங்கு கூடியுள்ளது.