மாரடைப்பால் மறைந்த நண்பருக்கு மரியாதை செய்த சந்தானம்!

மாரடைப்பால் மறைந்த நண்பருக்கு மரியாதை செய்த சந்தானம்!

இளம் நடிகர் மரணம் என்று டாக்டர் சேதுராமன் படத்தை போட்டு வந்த செய்தியை பார்த்து கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி சினிமா ரசிகர்கள் அதிர்ந்தனர்.


மாரடைப்பால் மரணம் என்று வந்த செய்தியைக்கேட்டு, 35 வயதி மாரடைப்பு மரணமா? என்றே பலரும் சந்தேகித்தனர். அதுதான் உண்மை என்று நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் விளக்கம் தந்தனர்.

மருத்துவ துறையில் தோல் சிகிச்சை நிபுணராக இருந்த டாக்டர் சேதுராமன், கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் நடிகர் ஆனார். தொடர்ந்து அவர் படங்களில் நடித்து வந்தாலும், மருத்துவ துறையையும் விடாமல் இருந்தார். கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு கிளினிக் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்த கிளினிக்கின் பூஜையில் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டிருந்தார்.

கிளினிக் வேலைகள் நடந்துகொண்டிருந்தபோதே சேது மரணம் நிகழ்ந்துவிட்டதால் கணவரின் ஆசையை மனைவி நிறைவேற்றி இருக்கிறார். சேது இறக்கும்போது அவர் மனைவி உமா கர்ப்பினியாக இருந்தார். அண்மையில்தான் ஆண்குழந்தை பிறந்தது. இன்று கிளினிக்கின் திறப்பு விழாவும் நடந்திருக்கிறது.

சேதுவின் நண்பரான நடிகர் சந்தானம், நண்பனுக்கு செய்யும் மரியாதையாக, கிளினிக்கை திறந்துவைத்துள்ளார்.

கிளினிக்கில் சிரித்தபடியே இருக்கும் நண்பன் சேதுவின் கட் அவுட் அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்ட சந்தானம், அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு , நண்பனின் கிளினிக்கை திறந்து வைத்தது ரொம்ப சந்தோசமாயிருக்குது என்று தெரிவித்துள்ளார்.

Share this story