”அண்ணாத்த” இறுதிக்கட்ட படப்பிடிப்பு இனி சென்னையில் தான் !
கொரோனா நோய் பரவல் காரணமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
கொரோனா காலகட்டத்தால் தள்ளிபோடப்பட்ட படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பத்து மாத இடைவெளிக்கு பின்பு கடந்த 13 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.இதற்காக நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா ஆகியோர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்றிருந்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.இந்நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு அப்படியே நிறுத்தப்பட்டது. மேலும் ரத்த அழுத்தத்தில் மாறுதல் ஏற்பட்டிருந்ததால் நடிகர் ரஜினிகாந்தும் ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின்வாங்கிய நிலையில் அவரது உடல்நிலை கருத்தில்கொண்டு மீதம் உள்ள அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி மாதம் முதல் நடைபெற உள்ளது. ஏற்கனவே 75 % படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது .