நிதிஷ் வீரா மறைவால் கண் கலங்கும் வெற்றிமாறன்… வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோ!
இயக்குனர் வெற்றிமாறன் மறைந்த நடிகர் நிதிஷ் வீரா குறித்து இரங்கல் தெரிவித்ததுடன் மக்களுக்கு கொரோனா பற்றிய விழிப்புணர்வு குறித்து பேசியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நேற்று நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நிதிஷ் வீரா வெண்ணிலா கபடி குழு, காலா, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘அசுரன்’ படத்தில் இவரது நடிப்பை அனைவரது மத்தியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நிதிஷ் வீரா குறித்து பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“நண்பர் நிதிஷ் வீரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்காருன்னு நேத்து சாயங்காலம் எனக்கு தகவல் சொன்னாங்க. உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன். இன்னும் இரண்டு நாட்களுக்குள் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும்னு டாக்டர் சொன்னாங்க. ஆனால் இன்று காலை 6 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்திதான் வந்தது.
அவரை எனக்கு புதுப்பேட்டை படத்திலிருந்து தெரியும். அப்போது நான் உதவி இயக்குனராக இருந்தேன். நிதிஷ் தனுஷ் மூலமாக எனக்கு பழக்கம் ஆனார். அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும், என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு.
எனக்கு கொரோனா வராது என்று மக்கள் எண்ண கூடாது. எல்லாருமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வெளியே சென்று வரும் இளைஞர்கள் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்று இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.