` சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாரை இயக்கும் வாய்ப்பு வந்தது' : நடிகர் பிரித்விராஜ்

லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு வந்ததாக நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
மோகன் லால் நடித்துள்ள `எல்2; எம்புரான்' படம் மார்ச் மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. பிரித்விராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து இந்த இரண்டாம் பாகம் தயாராகியிருக்கிறது. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று கொச்சியில் நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் மற்றும் இயக்குநர் ப்ரித்விராஜ், `` லைகா புரோடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் என்னை ரஜினி சாரோடு ஒரு படம் இயக்கக் கேட்டிருந்தார். இது புது இயக்குநருக்கு மிகப்பெரிய வாய்ப்பு. ஆனால், அந்த நேரத்தில் பகுதி நேர இயக்குநராக அந்தப் பொறுப்புகளுக்கு நான் தகுதியாக இல்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் கதையைத் தயார் செய்து அப்படத்தை எடுத்துமுடித்தாக வேண்டும். அது சாத்தியமில்லாத விஷயம். ஆதலால் அந்தப் படம் நடக்கவில்லை. சுபாஸ்கரன் சார் ஒரு நாள் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டார். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கிவிருப்பதாகச் சொன்னேன்.
"Lyca offered me an opportunity to direct #Rajinikanth sir. This opportunity was so good for a new director like me. They wanted the project to take off at a particular timeline, but I couldn't come up with a subject for #Rajinikanth sir"
— AmuthaBharathi (@CinemaWithAB) January 26, 2025
- #Prithviraj pic.twitter.com/ChphJSrwiv
`உங்களுடைய கனவுப் படத்தில் நான் எப்படி ஒரு அங்கமாக இருப்பது' எனக் கேட்டார். இந்தப் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. அப்படிதான் லைகா நிறுவனம் இப்படத்திற்குள் வந்தது. மலையாள சினிமாவில் லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவென்பது கூடுதல் சிறப்பு. சமீபத்தில் நான் பார்த்த சிறந்த டிரைலர் என்றால் அது `விடாமுயற்சி' படத்தின் டிரைலர்தான். அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகள். " எனப் பேசினார்.