எனக்காக இடையறாது சண்டக்கோழியாய் போராடினாய் – தனது நண்பன் லிங்குசாமி குறித்து வசந்தபாலன் உருக்கம் !
வீரன் டா.. சாமிடா.. லிங்குசாமிடா.. நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய் என லிங்குசாமியை கொண்டாடியுள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.
தமிழ் சினிமாவில் வெயில், அங்காடி தெரு, ஜெயில் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குநர் வசந்தபாலன். சமீபத்தில் அவர் கொரானா தொற்றுக்கு உள்ளாகினார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தபாலனை, அவரது உயிர் நண்பரும், இயக்குநருமான லிங்குசாமி, மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் கொரானாவிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் வசந்தபாலன். இதையடுத்து தனது நண்பன் லிங்குசாமிக்கு நன்றி தெரிவித்து உருக்கமான கவிதை ஒன்றை எழுதியுள்ளார் வசந்தபாலன். அதில், வீரன் டா.. சாமிடா.. லிங்குசாமிடா.. நீ ஆயிரம் ஆண்டுகள் வாழ்வாய் என லிங்குசாமியை கொண்டாடியுள்ளார்.
மேலும் வீரம் என்றால் என்ன? பயமில்லாத மாதிரி நடிக்கிறது. பழைய வசனம். வீரம் என்றால் என்ன தெரியுமா? பேரன்பின் மிகுதியில் நெருக்கடியான நேரத்தில் அன்பானவர்கள் பக்கம் நிற்பது புதிய வசனம். போன வாரத்தில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.
இந்த செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று இரவு முழுக்க நித்திரையின்றி இரவு மிருகமாய் உழண்டவண்ணம் இருக்கிறது. விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள் மருத்துவமனைத் தேடி விரைகிறது. எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது. தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது. இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது என ஒரு நீண்ட கவிதையை எழுதியுள்ளார் வசந்தபாலன்.