சூர்யா படத்தில் ரஷ்மிகா… புரளிய நம்பாதீங்க… பாண்டிராஜ் பதில்!
சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பல சறுக்கல்களுக்குப் பிறகு இப்படம் அவரை மீண்டும் உயர்த்தியுள்ளது.
தற்போது மணிரத்னம் தயாரிப்பில் உருவாகும் ‘நவரசா‘ அந்தாலஜி படத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக இதை அறிவித்தனர்.
பாண்டிராஜ் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். மேலும் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ‘பசங்க 2’ படத்தையும் இயக்கியிருந்தார். அந்தப் படத்திலும் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாண்டிராஜ்-சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்தப் படத்தில் ரஷ்மிகா மந்தான்னா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கார்த்தியுடன் ‘சுல்தான்’ படத்தில் நடித்துள்ள ரஷ்மிகா, சூர்யா படத்திலும் கமிட் ஆகியதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
தற்போது பாண்டிராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “நண்பர்களே! ‘சூர்யா40’ படம் பற்றிய உங்கள் ஆர்வத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். வதந்திகளை நம்ப வேண்டாம். தயாரிப்பு நிறுவனம் விரைவில் நடிகர்கள் மற்றும் குழுவினரை அறிவிக்கும்.உங்களுக்கு சிறந்ததை வழங்க நாங்கள் கடுமையாக உழைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ரஷ்மிகா சூர்யா படத்தில் நடிப்பதாக வெளியான செய்திகள் தற்போதைக்கு வதந்தி தான் என்று பாண்டிராஜ் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சூர்யா, இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘வாடிவாசல்‘ படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் ஹரி கூட்டணியில் ‘அருவா’ படத்திலும் நடிக்க உள்ளார்.