×

துல்கரின் 'கிங் ஆஃப் கோதா' நிறைவு... பட்டாசு வெடித்து கொண்டாடிய படக்குழுவினர் !

 

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகும் 'கிங் ஆஃப் கோதா' படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் துல்கர் சல்மான். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி என நான்கு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வரும் அவரது திரைப்படங்கள் பல மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் 'கிங் ஆஃப் கோதா'. 

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் மிரட்டலான தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். இந்த படத்தில் துல்கருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லஷ்மி நடித்து வருகிறார். இவர்களுடன் செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ புகழ் ஷபீர், பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்து வருகின்றனர். இப்படம் ஓணம் பண்டிகையையொட்டி வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் 95 நாட்கள் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவு பெற்றுள்ளது. இதை படக்குழுவினர் பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.