×

‘காதல் - தி கோர்’ படப்பிடிப்பை முடித்த ஜோதிகா.. ஒன்றுக்கூடி கொண்டாடிய படக்குழுவினர் !

 

மம்மூட்டி நடிப்பில் உருவாகும் ‘காதல் தி கோர்’ படத்தின் படப்பிடிப்பை நடிகை ஜோதிகா நிறைவு செய்துள்ளார். 

முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா, சூர்யாவை திருமணம் செய்துக்கொண்ட பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபகாலமாக தமிழில் மட்டுமே நடித்து வந்த ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் உருவாகும் ‘காதல் தி கோர்’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

இந்த படத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் இயக்குனர் ஜோ பேபி இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மேத்யூ புலிகன் என்பவர் இசையமைத்து வருகிறார். மம்மூட்டியின்  சொந்த நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள கோலஞ்சேரியில் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பில் கடந்த மாதம் நடிகை ஜோதிகா இணைந்தார். இந்த படப்பிடிப்பில் மம்மூட்டி மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தில் ஜோதிகா பகுதி படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றது. இதை கொண்டாடும் விதமாக ஜோதிகாவுடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.