×

‘என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார் சுகேஷ்’ - நடிகை ஜாக்குலின் பரபரப்பு குற்றச்சாட்டு !

 

தனது உணர்ச்சிகளுடன் விளையாடி தன் வாழ்க்கையை சுகேஷ் நாசமாக்கிவிட்டார் என்று நடிகை ஜாக்குலின் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.  

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முறைகேடாக பெற்று தர தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். இந்த வழக்கில் திகார் சிறையில் உள்ள அவர், சிறை இருந்தபடியே தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் மனைவியை ஏமாற்றி 200 கோடி ரூபாய் மோசடி செய்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கும் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறையினர் குற்றச்சாட்டினர். 

இந்நிலையில் நீதிமன்றத்தில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் கொடுத்துள்ளார். அதில் தனது உணர்ச்சிகளுடன் விளையாடி தனது வாழ்க்கை சுகேஷ் நரகமாக்கிவிட்டார்.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் என்றும், சென்னையில் உள்ள பிரபல தொலைக்காட்சி குழுமத்தின் உரிமையாளர் என்று கூறி என்னை ஏமாற்றிவிட்டார். 

தென்னிந்தியாவில் புதிததாக திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாகவும், அதில் தன்னை நடிக்க வைப்பதாகவும் கூறினார். தன்னை தவறாக வழி நடத்தி, தனது தொழிலையும், வாழ்வாதாரத்தையும் நாசமாக்கிவிட்டார் சுகேஷ் என்று பரபரப்பு குற்றச்சாட்டை ஜாக்குலின் வைத்துள்ளார்.