×

'எனது சொத்துக்களை அடமானம் வைத்துவிட்டேன்' - நடிகை கங்கனா குமுறல் !

 

'எமர்ஜென்சி' படத்திற்காக எனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்துவிட்டேன் என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.‌

 பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'எமர்ஜென்சி'. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, நாடு முழுவதும் அமுல்படுத்திய அவசரநிலையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் இந்திராகாந்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் கங்கனா, படத்தை இயக்கியும் வருகிறார். 

இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் ஆகியவற்றை ரித்தேஷ் ஷா கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் கங்கனா, படத்திற்காக தனது சொத்துக்களை அடமானம் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவர், ஒரு நடிகையாக 'எமர்ஜென்சி' படத்தை முடித்துள்ளேன். 

இந்த படத்தை எடுத்து எனது வாழ்க்கையின் முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளேன். நான் ஆடம்பரமாக பயணித்து வருவதாக தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. எனது அனைத்து சொத்துக்களையும் அடமானம் வைத்துதான் இந்த படத்தை தயாரித்துள்ளேன். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பின்போது டெங்குவால் பாதிக்கப்பட்டேன். ரத்த அணுக்கள் குறைந்தது. ஆனாலும் வேறு வழியின்றி படத்தில் நடித்தேன். ஒரு தனி நபராக நான் மிகவும் சோதிக்கப்பட்டேன் என்று கூறினார்.