×

10 Years of ‘டிமான்டி காலனி’.. இயக்குனர் அஜய் ஞானமுத்து நெகிழ்ச்சி...
 

 

‘டிமான்டி காலனி’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவுபெற்றதை அடுத்து அதன் இயக்குனர்  அஜய் ஞானமுத்து நெகிழ்ச்சியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 தற்போது ‘டிமான்டி காலனி’ வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு அஜய் ஞானமுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “என் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் நன்றி தெரிவிக்கவும் சரியான நேரம் இது. 10 வருடங்களுக்கு முன்னால் தமிழ்த் திரையுலகில் பல இளம் தொழில்நுட்ப கலைஞர்களுடன் எனது இயக்குநர் பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது எனது முதல் படம் ‘டிமான்டி காலனி’ 10 வருடங்கள் நிறைவு செய்திருப்பது உணர்வுப்பூர்வமான தருணமாக உள்ளது.

 

மோக்னா மூவிஸ் எம்.கே தமிழரசு, அருள்நிதி மற்றும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி ஆகியோரின் ஆதரவு இல்லையென்றால், ‘டிமான்டி காலனி’ திரைப்படம் உருவாகி இருக்காது. அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.டிமான்டி காலனி திரைப்படம் ஒரு நினைவாக இல்லாமல் ஒரு புதிய உலகமாக மாறி நிற்பதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன்.அருள்நிதி ‘டிமான்டி காலனி’ உலகத்திற்கு தனது ஆதரவை தொடர்ந்து கொடுத்து வருகிறார் என்பது எனக்கு மிகுந்த உறுதுணையாக உள்ளது. மேலும், தொழில்துறை நண்பர்கள், பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் எனக்குக் கொடுத்து வரும் அன்பு ஒவ்வொரு கட்டத்திலும் தரமான படைப்பை வழங்குவதற்கான பொறுப்பை மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த DC வரிசையில் இரண்டு படங்களுக்கும் கிடைத்த மகத்தான வரவேற்பை அடுத்து இதன் மூன்றாவது பாகத்தை எனது குழுவுடன் இணைந்து அனைத்து வகையிலும் தரமாகவும், சிறப்பாகவும் எடுத்து வருகிறோம். இது நிச்சயமாக சினிமா ரசிகர்களுக்கு புது வகையான சில்லிடும் ஹாரர் அனுபவத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் அடுத்தகட்ட தகவலுடன் மீண்டும் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் அஜய் ஞானமுத்து.