‘யார நம்புறதுனே தெரியல தாஸ் அண்ணா….’ –“அயன்” திரைப்படத்தின் 14ஆண்டுகள்.
பிளாக் பஸ்டர் திரைப்படமான ‘அயன்’ திரைப்படம் வெளியாகி 14ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் பலரும் சமூகவலைதளம் வாயிலாக கொண்டாடி வருகின்றனர்.
மறைந்த இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் தாயாரான திரைப்படம் ‘அயன்’ கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் சூர்யா, தமன்னா, பிரபு, ஜெகன், கருணாஸ், அகஷ்தீப் சைக்ஹல் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . குறிப்பாக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், நா. முத்துகுமார், பா. விஜய் வரிகளில் பாடல்கள் அனைத்துமே அதிரிபுதிரி ஹிட். இன்று கூட அந்த பாடல்கள் பலரது பிளே லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளன.
தங்கம், வைரம், போதைபொருள் இவைகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கடத்தும் நபராக நடித்திருப்பார் சூர்யா. பொதுவாக நாம் செய்திகளில் பார்க்கும் கடத்தல் செய்திக்கு பின்னால் என்ன இருக்கிறது. அதன் அரசியல் என்ன, கடத்தல் உலகம் எப்படிபட்டது, ரெய்டு இவைகளை கமர்சியல் கலந்து மிக சுவாரசியமாக காட்சிப்படுத்தியிருப்பார் இயக்குநர். சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படம் , கிட்டத்தட்ட 80 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.
படம் வசூலை வாரி குவித்தது மட்டுமல்லாமல், தமிழகத்தில் கிட்டத்தட்ட 200 நாட்கள் ஓடி புதிய சாதனையையும் படைத்தது. திரைப்படம் விநியோகஸ்தகர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. படம் வெளியாகி 14ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் இந்த வேளையில் படத்தின் இயக்குநர் கே.வி ஆனந்த்-ஐ மிஸ் செய்வதாக ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.