×

அர்ஜூன் - விஷ்வாக் சென் இடையே திடீர் மோதல்.. படப்பிடிப்பில் நடந்தது என்ன ? 

 

 அர்ஜூன் மற்றும் விஷ்வாக் சென் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக இருக்கும் அர்ஜூன், நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் புதிய படம் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் விஷ்வாக் சென் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா நடிக்கிறார். இவர்களுடன் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

சமீபத்தில் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து கடந்த வாரம் கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் ஜெகபதி பாபுவுடன் விஷ்வாக் சென் நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட இருந்தது. ஆனால் நீண்ட நேரம் படக்குழுவினர் காத்திருந்தும் விஷ்வாக் சென் வரவேவில்லை. அதனால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன், விஷ்வாக் சென் மிகவும் பொறுப்பற்றவராக இருக்கிறார். அவர் கேட்ட ஊதியத்தை தரவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஒப்புக் கொண்டபடி படப்பிடிப்பிற்கு வரவேவில்லை. பல முறை அவரிடம் பேச முயற்சித்தபோதும் அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவேவில்லை. இனி அவருக்காக காத்திருக்க மாட்டேன். பணம் நஷ்டமானாலும் பரவாயில்லை. அவருக்கு பதிலாக புதிய நடிகரை நடிக்க வைக்கவுள்ளேன் என்று நடிகர் அர்ஜூன் காட்டமாக தெரிவித்தார். 

நடிகர் அர்ஜூனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விஷ்வாக் சென், நான் பல படங்களில் பணி புரிந்திருக்கிறேன். அனைத்து தயாரிப்பாளர்களுடனும் நட்புடன் தான் பழகி இருக்கிறேன். இந்த படத்தின் பாதி ஸ்கிரிப்ட் தான் எனக்கு கிடைத்திருக்கிறது. என்னை சமாதானம் செய்ய மட்டுமே அர்ஜூன் முயற்சிக்கிறார். எனக்கு இந்த படத்திலிருந்து வெளியேறும் எண்ணமில்லை. ஆனால் அவர் சொன்ன குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கவே என்ன உண்மை என்பதை விளக்கியுள்ளேன் என்று கூறியுள்ளார். அர்ஜூன் மற்றும் விஷ்வாக் சென் இடையே ஏற்பட்டுள்ள இந்த திடீர் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.