மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் தனுஷ்.. விரைவில் அறிவிப்பு இருக்கும் என தகவல் !
நடிகர் தனுஷ் மீண்டும் புதிய படங்களை தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதனால் தனுஷை திரையுலமும், ரசிகர்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போது கைவசம் இருந்த திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களை நடித்து முடித்திருக்கிறார்.
இதையடுத்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். பன்முக திறமைக் கொண்ட தனுஷ், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை கடந்த 2013-ஆம் ஆண்டு ஆரம்பித்த தனுஷ், முதன்முதலில் சிவகார்த்திகேயனின் ‘எதிர் நீச்சல்’ படத்தை தயாரித்தார்.
அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, விசாரணை, நானும் ரௌடிதான், விஐபி 2, வடசென்னை, மாரி 2 ஆகிய படங்களை தயாரித்தார். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்தையும் தயாரிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் தனுஷ், தான் நடிக்கும் புதிய படங்களை தயாரிக்கவுள்ளாராம். அதில் பியார் பிரேமா காதல் இயக்குனர் இயக்கும் படமும், தனுஷே இயக்கும் படமும் அடங்கும் என கூறப்படுகிறது.