×

 இந்தி பட வாய்ப்பை நிராகரித்தாரா யாஷ்..??

 


கேஜிஎஃப்  படம் மூலம் புகழ்பெற்ற  நடிகர் யாஷ் , இந்தி பட வாய்ப்பை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்று, ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் கன்னட நடிகர் யாஷ்.  இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குப் பல வாய்ப்புகள் வந்தும், அவர் தனது அடுத்தப் படத்தை அறிவிப்பதில் இன்னும் தாமதம் காட்டிவருகிறார். அடுத்ததாக யாஷின் , கே.ஜி.எஃப் 3 படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் யாஷிடம், நீங்கள் பான்-இந்தியன் ஸ்டாராக மாறியுள்ள கன்னட நடிகரா? அல்லது  கன்னட சினிமாவில் நடிக்கும் பான்-இந்தியன் ஸ்டாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு  யாஷ், “நான் ஒரு கன்னடர், அதை மாற்ற முடியாது. ஆனால் நானும் ஒரு இந்தியன். நம் நாட்டில் நாம் இந்தியர்கள். எனவே, கலாச்சாரத்தில் நாம் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறோம். கர்நாடகாவில் பொதுவாக துளு கலாச்சாரம் உள்ளது. ஆனால், வட கர்நாடகத்தில் அது வேறாக இருக்கும். இதுபோன்றவையே நமது பலம். இது ஒருபோதும் நமது பலவீனமாக மாறிவிடக்கூடாது.

என்னைப் பொறுத்தவரை சினிமா ஒரு தொழில். அதை வடக்கு, தெற்கு என பிரிக்கக்கூடாது. இதுபோன்ற பேச்சுக்களில் இருந்து மக்கள் கடந்துவந்துவிட்டனர். அவர்கள் யாரும் இப்போது பாலிவுட் ஸ்டார், மற்ற மொழிகளின் ஸ்டார் எனப் பார்ப்பதில்லை”
என்று பதிலளித்திருக்கிறார்.   இதற்கிடையே  ரன்பீர் கபூர், ஆலியா பட்  நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிரம்மாஸ்திரா’ படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருகிறது.

இதில் முக்கிய  கேரக்டரில்  நடிக்க, ஹிர்த்திக் ரோஷன், ரன்வீர் சிங் ஆகிய முன்னணி பாலிவுட் நடிகர்களிடம் இயக்குநர் அயன் முகர்ஜி பேசி வந்திருக்கிறார்.   அவர்கள் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து  நடிகர் யாஷிடம் பேசியுள்ளனர்.  தயாரிப்பாளர் கரண் ஜோஹரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.  2 முறை அவர்கள் சந்தித்துப் பேசியும், யாஷ் நடிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.