×

‘எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்’ - புதிதாக பிறந்த மகனுக்காக ஆர்.கே.சுரேஷ் உருக்கம் !

 

பிறந்த குழந்தை மூச்சு திணறல் பிரச்சனை இருப்பதால் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் உருக்கமாக தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஆர்.கே.சுரேஷ். சலீம், தர்மதுரை உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறார். இதுதவிர பாலாவின் ‘தாரை தப்பட்டை’, ‘மருது’, ‘புலிக்குத்தி பாண்டி’, ‘விசித்திரன்’ உள்ளிட்ட படங்களில் நடிகராக அசத்தியுள்ளார்.  

இதற்கிடையே கடந்த 2020-ஆம் ஆண்டு பைனான்சியர் மது என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். ஏற்கனவே இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதையடுத்து மது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். இதையொட்டி கடந்த ஆண்டு வளைக்காப்பு நிகழ்ச்சியை ஆர்.கே.சுரேஷ் நடத்தினார். இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். 

இந்நிலையில் ஆர்.கே.சுரேஷ் மற்றும் மது தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் எதிர்பார்க்காத விதமாக குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. அதனால் எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், அவரது குழந்தைக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.