திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் சூர்யா

திரை உலகில் நடிகர் சூர்யா 25 ஆண்டுகளை இன்று நிறைவு செய்துள்ளார்.
இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டில் வெளியான நேருக்கு நேர் படத்தின் மூலம் திரையுலகில் காலடி பதித்தவர் நடிகர் சூர்யா. நடிகர் விஜய்யுடன் சூர்யா இணைந்து நடித்த நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசை அமைத்தார். நேருக்கு நேர் திரைப்படம் மாநில விருதுகளை வாரி குவித்தது. அன்றிலிருந்து இன்று வரை தனது நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டுள்ள நடிகர் சூர்யா சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். அகரம் பவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருகிறார்.
நந்தா, காக்க காக்க, பிதாமகன் ,பேரழகன் ,வாரணம் ஆயிரம் ,ஏழாம் அறிவு உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பல முக்கிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் சூர்யா இன்றளவும் வலம் வருகிறார் . தனது நடிப்பு திறமையால் தமிழக அரசு திரைப்பட விருதுகள், நான்கு தென்னிந்திய பிலிம் பேர் விருதுகள், இரண்டு எடிசன் விருதுகள் ஆகியவற்றை வாங்கி குவித்துள்ள இவர் சமீபத்தில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதையும் பெற்றுள்ளார். சின்னத்திரையில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்த இவர் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தற்போது திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார் . நல்ல சிந்தனை கொண்ட கருத்துள்ள திரைப்படங்களை இவர் தயாரித்து வரும் நிலையில் இவரது தயாரிப்பில் சமீபத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் இலக்கை அடைந்தது எனலாம்.
இந்நிலையில் நடிகர் சூர்யா திரை உலகிற்கு வந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்