×

‘மூன்று முறை அந்த படத்தை பார்த்திருக்கிறேன்’ - பிரபல நடிகரை பாராட்டிய சூப்பர் ஸ்டார் !

 

‘ராம்’ படத்தை மூன்று முறை பார்த்துவிட்டு என்னை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியதாக பிரபல நடிகர் தெரிவித்துள்ளார்.

சினிமா வாரிசாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் நடிகர் ஜீவா. பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனாக இவர், ‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதன்பிறகு ராம், டிஷ்யூம், ஈ, கற்றது தமிழ், தெனாவட்டு, சிவா மனதில சக்தி, கச்சேரி ஆரம்பம், கோ, ரௌத்திரம், நண்பன், நீ தானே பொன் வசந்தம், முகமூடி, டேவிட், என்னென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதில் ‘ராம்’ திரைப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து சில ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த அவர், தற்போது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘காஃபி வித் காதல்’ நடித்துள்ளார். 

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட ஜீவாவிடம், திரையுலகை சேர்ந்த யாரிடம் நீங்கள் கலந்துடையாடியது மகிழ்ச்சியை தந்தது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜீவா, என்னுடைய 20 ஆண்டுகளாக திரை வாழ்க்கையில் நிறைய பிரபலங்களை சந்திந்துள்ளேன். அதில்  விஜய், அஜித், மோகன்லால், ரஜினி என பல பிரபலங்கள் பேசியது நிறைவான தருணங்கள். அவர்களுடைய பாராட்டுக்களும் கிடைத்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு விட்டு திரும்பும்போது ரஜினி சாரை சந்தித்தேன். அப்போது ராம் படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு பிறகும் அந்த படத்தை மூன்று முறை பார்த்ததாக என்னிடம் ரஜினி சார் கூறினார். அவரின் அந்த பாராட்டு என்னால் மறக்க முடியாததது என்று நடிகர் ஜீவா தெரிவித்தார்.