×

'துணிவு' படம் பார்க்க அனுமதிக்காததால், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகர் அஜித்தின் ரசிகர்.

 

சமீபத்தில் வெளியான கோலிவுட்டின் பெரிய நடிகர்களின் படங்களான 'துணிவு மற்றும் வாரிசு' திரைப்படங்கள் திரையரங்களில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுவருகிறது. இந்த நிலையில் படம் வெளியான தினம் கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இல்லாமல் அரங்கேறியது, ஆனால் அன்று துரதிஷ்ட விதமாக பரத் என்கிற அஜித்தின் தீவிர ரசிகர் ஒரு விபத்தில் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து தற்போது வீரபாகு  என்கிற அஜித்தின் மற்றுமொரு ரசிகர்  துணிவு படம் பார்க்க விடாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேரியுள்ளது.

சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கிற்கு  வெளியே ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அங்கிருந்த லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட அஜித் ரசிகர் பரத் என்ற இளைஞர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்தவர் வீரபாகு. தீவிர அஜித் ரசிகரான இவர், துணிவு படம் பார்க்க தனது குடும்பத்தினருடன் தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது வீரபாகு மது அருந்தியிருந்ததால்  அவரை தியேட்டர் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை. அதுமட்டுமின்றி குடும்பத்தினர் முன்னிலையில், அவரை தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால்  வீரபாகு நீங்கலாக மற்றவர்கள் படம் பார்க்க அனுமதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வீரபாகு, வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

சினிமாவை வெறும்  பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள் என பல பிரபலங்கள் கூறிவரும் நிலையில் இது போன்ற சம்பவம் தொடர்கதையாகி வருவது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.