×

நடிகர் பார்த்திபன் படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு..! 

 

பார்த்திபன் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான திகில் கதையம்சம் கொண்ட திரைப்படம் 'டீன்ஸ்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ ரிலீஸ் ஆகும் ஜூலை 12ஆம் தேதி 'டீன்ஸ்’ படத்தையும் பார்த்திபன் ரிலீஸ் செய்ய முடிவு செய்த நிலையில் திடீரென இந்த படத்திற்கு தடை கேட்டு சிவப்பிரசாத் என்பவர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.  இதே சிவ பிரசாத் என்பவர் மீதுதான் இன்று காலை பார்த்திபன் கோவை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் அவர் பதிலடியாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

சிவப்பிரசாத் படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக ரூ.68.50 லட்சம் பேசப்பட்டதாகவும் ஆனால் ஒப்பந்தப்படி இல்லாமல் அதிகப்படியான பணி கொடுத்ததால் தான் குறிப்பிட்ட காலத்திற்கு பணியை முடிக்க முடியவில்லை என்றும் சிவ பிரசாத் விளக்கமளித்துள்ளார். மேலும் தனக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இந்த படத்தை வெளியிட கூடாது என்றும் இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இந்த வழக்கு காரணமாக பார்த்திபன் தனது 'டீன்ஸ்’ திரைப்படத்தை திட்டமிட்டபடி ஜூலை 12ல் ரிலீஸ் செய்வாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.