×

படமாகும் காட்டு யானைகளின் வாழ்வியல்.. மீண்டும் ஆக்ஷன் நாயகனாக களமிறங்கும் விஜயகாந்த் மகன் !

 

 விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். 

முன்னணி நடிகர் விஜயகாந்தின் சினிமா வாரிசாக இருப்பவர் சண்முகபாண்டியன். ‘மதுரை வீரன்’ படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக முதல்முதலில் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டுமொரு புதிய ஆக்ஷன் படத்தில் அவர் நடிக்கிறார். 

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் ஆக்ஷன் படமாக இப்படம் உருவாகிறது. புதிமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ‘வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய இயக்கிய U அன்பு எழுதிய கதையை அவரே இயக்குகிறார். ‘நட்பே துணை’ படத்தின் இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு இப்படத்திற்கு வசனம் மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். 

இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில்  சண்முகபாண்டியன் நடிக்கிறார். கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் இணைந்து சில முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கேரள காடுகளில் தொடங்கவுள்ளது. இதையடுத்து ஒரிசா மற்றும் தாய்லாந்து காடுகளில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பூஜை இன்று நடைபெற்றது. இதில் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். வரும் ஆடி 18-ஆம் தேதி இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படும் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.