×

'90 சதவீதம் குணமடைந்துவிட்டேன்' - 'பிச்சைக்காரன் 2' பணிகளை தொடங்கிய விஜய் ஆண்டனி ட்வீட் !

 

90% குணமடைந்து விட்டதால் 'பிச்சைக்காரன் 2' படத்தின் பணிகளை இன்று முதல் தொடங்கியுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 16-ஆம் தேதி மலேசிய நாட்டில் உள்ள லங்கா தீவில் நடைபெற்றது. அப்போது கடலில் ஜெட் ஸ்கை படகை இயக்கிய போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் அவருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.‌ தாடை, பற்களில் அடிப்பட்டது. இதையடுத்து மலேசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

பின்னர் சென்னை அவருக்கு ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இது குறித்து அவரே கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில் மலேசியாவில் நடைபெற்ற ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்திலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளேன். ஒரு பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. உங்கள் அனைவரிடமும் கூடிய விரைவில் பேசுவேன் என்று கூறியிருந்தார். 

இதைத்தொடர்ந்து ஓய்வெடுத்த வந்த அவர் மீண்டும் பிச்சைக்காரன் 2 பணிகளை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அன்பு இதயங்களே... நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன். வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.