×

படப்பிடிப்பை முடித்த நடிகை பார்வதி... ‘தங்கலான்’ குறித்து புதிய அப்டேட் 

 

‘தங்கலான்’ படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக நடிகை பார்வதி தெரிவித்துள்ளார். 

பா ரஞ்சித் மற்றும் விக்ரம் கூட்டணியில் மிரட்டலான கதைக்களத்தில் உருவாகி வருகறது ‘தங்கலான்’. ஏற்கனவே இப்படத்திலிருந்து மேக்கிங் காட்சிகள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. ப்ரீயட் படமாக உருவாவதால் அதன் காட்சிகள் தரம் வியக்க வைக்கும் வகையில் உருவாகி வருகிறது. 

இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன்  கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் பசுபதி, மலையாள நடிகை பார்வதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.  ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் முழுக்க முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகி வெளியாகவிருக்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. 

பல கட்டங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடைபெற்று வந்தது. அப்போது படப்பிடிப்பில் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. இதில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி ஆகியோரது காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனது பகுதி காட்சிகள் எடுக்கப்பட்டுவிட்டதாக நடிகை பார்வதி சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.