×

நடிகை பார்வதி வீட்டில் கொள்ளை போன விவகாரம்.. தவறான செய்தி பரப்பும் ஊடகங்களுக்கு கடும் எச்சரிக்கை !

 

தனது வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து தவறான தகவல் பரப்பும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நடிகை பார்வதி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்து வரும் மலையாள நடிகை பார்வதி நாயர்,  ‘என்னை அறிந்தால்’, ‘நிமிர்ந்து நில்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வருகிறார். 

கடந்த மாதம் அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில்  6 லட்சம் ரொக்கம் மற்றும் 50 ஆயிரம் மதிப்புடைய மடிக்கணினி, 3 லட்சம் மதிப்பிலான 2 கை கடிகாரங்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் வேலை பார்த்து வந்தவர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கூறி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை பார்வதி புகார் அளித்திருந்தார். இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்த கொள்ளை விவகாரம் குறித்து சில ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டதாக தெரிகிறது. இதற்கு நடிகை பார்வதி தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் நடிகை பார்வதியின் புகழுக்கும், நற்பெயருக்கும் களங்கும் கற்பிக்கும் வகையில் அவதூறு செய்திகள் வெளியாகி வருகிறது. இதுபோன்ற செய்திகளை தொடர்ந்து வெளியிட்டால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.