×

'சிவாஜி' படத்தில் நடித்தபோது நிறைய கற்றுக்கொண்டேன் - ரஜினி குறித்து நடிகை ஸ்ரேயா சரண் நெகிழ்ச்சி !

 

நடிகர் ரஜினியுடன் நடித்த போது நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் என நடிகை ஸ்ரேயா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஸ்ரேயா சரண்.  தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் பலமொழிகளில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், தற்போது மீண்டும் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கன்னடத்தில் ஸ்ரேயா சரண் நடித்துள்ள திரைப்படம் 'கப்சா'. 

கன்னட நடிகர் உபேந்திரா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் மார்ச் 17-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு பேசிய ஸ்ரேயா சரண், ரஜினி தான் எப்போதும் சூப்பர் ஸ்டார். அவருடன் நடிக்கும் போது நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். 

மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன். ஒருவருக்கு எப்படி மரியாதை கொடுக்கவேண்டும், மற்றவர்களிடம் அன்பு செலுத்தவேண்டும் என பல விஷயங்களை அவரிடம் கற்றுக் கொண்டேன். நமது வெற்றியை தலைக்கு மேல் உயர்த்திக் கொள்ளக்கூடாது என்பது அவரை பார்த்துதான் தெரிந்துக் கொண்டேன். ‘சிவாஜி’ படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் ஷங்கருக்கு நன்றி என்று கூறினார்.