ஆர்த்தி குறித்து பரபரப்பு குற்றசாட்டு... நடிகர் ரவி மோகன் அறிக்கை...
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், ஆர்த்தி ரவியின் குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரவி மோகன் கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ரவி மோகன் ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தார். ஆனால் ஆர்த்தி இது அவர் தன்னிச்சையாக எடுத்த முடிவென்றும் என்னுடைய ஒப்புதல் இல்லாமல் எடுத்த முடிவென்றும் கூறியிருந்தார். பின்னர் ரவி மோகன், ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் இரண்டு பேரும் ஆஜராகி விளக்கமளித்தனர். இருப்பினும் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே ரவி மோகனின் விவகாரத்து முடிவிற்கு பெங்களூரூவை சேர்ந்த பாடகி கெனிஷா தான் காரணம் என ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் பேட்டி கொடுத்தார். அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்திருந்தார். இந்த தகவலை மறுத்த ரவி மோகன், ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில், “என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவே இருக்க விடுங்க. கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர். நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” என கூறியிருந்தார்.
பாடகி கெனிஷாவும் ரவி மோகனின் விவாகரத்து முடிவிற்கு நான் காரணமில்லை என விளக்கமளித்திருந்தார். இந்த சூழலில் ரவி மோகனும் கெனிஷாவும் ஒரு திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டுள்ளனர். வேல்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண நிகழ்வு இன்று சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் என பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் ரவி மோகனும் பாடகி கெனிஷாவும் ஒரே கலர் உடையுடன் ஒன்றாக கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் ஏற்கனவே வந்த தகவல்களை மறுத்த நிலையில் தற்போது ஒன்றாக பொதுவெளியில் தோன்றியது கோலிவுட்டில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அந்த அறிக்கையில், “எனது முன்னாள் மனைவி பொய்யான விஷயங்களை உருவாக்குகிறார். நான் அவரையும் எனது குழந்தைகளையும் பண ரீதியாக துன்புறுத்தியதாக அவர் கூறும் குற்றச்சாட்டு அதிர்ச்சியளிக்கிறது. எல்லா பிரச்சனைகளுக்கு தீர்வு நீதிமன்றத்தில் கிடைக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அல்ல. எனது திருமணத்தின் தொடக்கத்திலிருந்தே என் முன்னாள் மனைவியின் குடுமபத்தினர் நன்றாக கேம் ஆடுகின்றனர். கெனிஷா ஆரம்பத்தில் இருந்து தோழியாக என்னை சில பிரச்சனைகளில் இருந்து மீட்டெடுத்தார். பின்பு நான் உடைந்து நின்ற போது என் வாழ்க்கைக்குள் வந்தார். நான் என் சொந்த வீட்டை வெளியேறிய பின்பு எனக்கு ஆதரவாக இருந்தார். அவர் ஒரு அழகான தோழி. நான் சட்ட ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, நிதி ரீதியாக போராடிய அனைத்துப் போராட்டங்களையும் அவர் பார்த்திருக்கிறார். புகழுக்காக அல்ல, கவனத்திற்காக அல்ல, மாறாக முழுமையான பச்சாதாபம் மற்றும் வலிமைக்காக. அதனாலேயே என்னுடன் இருக்க தேர்ந்தெடுத்தார். நான் சந்தோஷமாக இருப்பதற்கு காரணம் அவர் தான்.
அவருடைய குணத்துக்கும் தொழிலுக்கும் சிறு அளவில் கூட அவமரியாதை ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன். அவர் ஒரு ஆன்மீக சிகிச்சையாளர் - ஆம், ஒரு அற்புதமான பாடகியும் கூட. ஆரம்பத்தில் என் கதையைச் சுருக்கமாகக் கேட்ட நிமிடமே, அவர் எனக்கு ஒரு தோழியாக மட்டுமே உதவுவேன் என்றும், ஒரு சிகிச்சையாளராக அல்ல என்றும் உறுதியளித்தார். அவர் தான் என் வாழ்வில் ஒளி கொண்டுவந்தார். என்னை அறிந்தவர்களுக்கு என் நன்றி உணர்வு தெரியும். என்னை நீங்கள் மதிக்கிறீர்கள் என்றால், கெனிஷாவுக்கும் அதையே செய்வீர்கள் என நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.