×

மீண்டும் ‘அயலான்’ பட இயக்குனருடன் கூட்டணி... சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய அப்டேட் !

 

‘அயலான்’ இயக்குனர் படத்தில் மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் சயின்ஸ் பிக்‌ஷன் படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஆர்.ரவிக்குமார். அவர் இயக்கிய முதல் படமான ‘இன்று நேற்று நாளை’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' படத்தை இயக்கினார். அதிக கிராபிக்ஸ் பணிகள் காரணமாக இப்படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருக்கிறது. 

இந்நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குனர் ஆர் ரவிக்குமார் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகளை அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படம் உருவாக இருக்கிறது. இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் 'மாவீரன்' படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் அவர் நிறைவு செய்தார். இந்தப் படத்திற்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். அதன்பிறகு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு ஆர் ரவிகுமார் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'அயலான்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் அயலான் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து அயலான் படத்தை 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிக்கின்றனர்.

ஏலியன் கதைக்களத்தில் படம் உருவாகி வருகிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டரை தவிர வேறு எந்த அப்பேட்டும் வெளியாகவில்லை.  இந்தப் படம் 3 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கப்பட்டது. ஏலியன் கதைக்களம் என்பதால் படத்தில் அதிக விஎப்எக்ஸ்(VFX)  காட்சிகள் இடம் பெறுகின்றன. அதனால் தான் படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.