‘புஷ்பா 2’ வெற்றி விழா : ரசிகர்களின் அன்பு குறித்து அல்லு அர்ஜுன் நெகிழ்ச்சி
புஷ்பா 2 படத்தின் வெற்றி விழாவில் நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களின் அன்பு தான் நிரந்தரம் என்று பேசியுள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 2021 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் புஷ்பா பாகம்-1 திரைப்படத்தில் நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தல் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து புஷ்பா பாகம் 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த நிலையில் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் கலந்த கதைக்களத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் 6 நாட்களில் 1002 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக நேற்று (டிசம்பர் 11) படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதாவது மிகக் குறுகிய நாட்களில் எந்த படமும் ஆயிரம் கோடியை வசூல் செய்ததில்லை. ஆனால் புஷ்பா 2 திரைப்படம் அந்த சாதனையை படைத்துள்ளது.