×

பா ரஞ்சித்துடன் மீண்டும் இணைந்த ‘அட்டக்கத்தி’ தினேஷ்... படத்திற்கு வித்தியாசமான தலைப்பு !

 

 பா ரஞ்சித் தயாரிப்பில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி இயக்குனராக இருக்கும் பா ரஞ்சித், தனது நீலம் பிரொக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் புதிய படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’,‘பரியேறும் பெருமாள்’, ‘குதிரை வால்’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தனது முதல் படமான ‘அட்டக்கத்தி’ படத்தின் கதாநாயகன் தினேஷை வைத்து அடுத்தடுத்து புதிய படங்களை பா ரஞ்சித் தயாரித்து வருகிறார். ஏற்கனவே பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக இருந்த சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ் நடிப்பில் ‘ஜெ பேபி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். 

இந்த படத்திற்கு பிறகு ‘இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு’ படத்தை இயக்கிய அதியன் ஆதிரை இயக்கத்தில் புதிய படத்தை பா ரஞ்சித்தின் நீலம் பிரொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் தினேஷ் மற்றும் கலையரசன் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

 இந்த படத்தின் கதாநாயகிகளாக ரித்விகா, வின்ஷூசாம் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷபீர், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ‘தாண்டகாரண்யம்’ தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.