×

அண்ணன் சத்யநாராயணாவுக்கு சதாபிஷேகம்... தங்க காசுகளால் நனைய வைத்த ரஜினி !

 

தனது அண்ணன் சத்ய நாராயணனுக்கு சதாபிஷேகம் நடத்தி தங்க காசுகளால் நடிகர் ரஜினி நனைய வைத்துள்ளார். 

இந்தியா சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் அவர், பேருந்தில் நடத்துனராக இருந்து கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்துள்ளார். எவ்வளவு உயரம் சென்றாலும் தனது அண்ணன் சத்யநாராயணா தான் ரஜினிக்கு பெற்றோர் மாதிரி. அதனால் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்து தேவையானவற்றை செய்து வருகிறார். 

இந்நிலையில் ரஜினியின் அண்ணன் சத்யநாராயண் ராவ், 80வது பிறந்தநாள் நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு நேற்று சதாபிஷேகம் நடைபெற்றது. அதோடு சத்யநாராயணாவின் மகன் ராமகிருஷ்ணாவும் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த விழாவில் தனது மனைவி லதாவுடன் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். அப்போது சதாபிஷேக விழாவில் சத்யநாராயணனை தங்க காசுகளால் நனைய வைத்தார். 

தனது குடும்ப விழாவில் பங்கேற்றது குறித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதில், எனது சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட்டின் 80வது பிறந்தநாளையும், அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60வது பிறந்தநாளையும் ஒருநாளில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடினோம். நான் இன்று இப்படியிருக்க காரணமான தங்க இதயத்தில் தங்க மழை பொழிவதை பாக்கியமாக கருதுகிறேன் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார்.