×

செக் மோசடி வழக்கு... ‘கோச்சடையான்’ பட தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை !

 

 செக் மோசடி வழக்கில் ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரது இளைய மகள் செளந்தர்யா இயக்கத்தில் நடித்த அனிமேஷன் திரைப்படம் ‘கோச்சடையான்’. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான இப்படம் மோசமான விமர்சனங்களை சந்தித்தது. இந்த படத்தை முரளி மனோகரின் மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. 

இந்த படத்தின் தமிழக விநியோக உரிமை முரளி மனோகர் என்பவருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இதற்காக தயாரிப்பாளர் மனோகருக்கும், அபிர் சந்த் நாகருக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் படத்தை தயாரித்த அபிர் சந்த் நாகருக்கு திரைப்பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கொடுக்க வேண்டிய ரூபாய் 5 கோடி காசோலை பணமில்லாமல் திரும்பியது. 

இதையடுத்து சென்னை விரைவு நீதிமன்றத்தில் பைனான்சியர் அபிர் சந்த் நாகர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 9 சதவீத வட்டியுடன் சேர்ந்து 7.70 கோடியை அபிர் சந்திற்கு தரவேண்டும் என்று முரளி மனோகருக்கு உத்தரவிட்டது. பணம் கட்ட தவறும் பட்சத்தில் 6 மாத சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் முரளி மனோகர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம், விரைவு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து வழக்கை தள்ளுபடி செய்தது.