×

தொடர்ந்து சமூக அக்கறையுடன் செயல்படும் நடிகர் சூர்யா... முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு  !

 

 தொடர்ந்து சமூக அக்கறையுடன் நடிகர் சூர்யா செயல்பட்டு வருவதாக முதல்வர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சூர்யா, சமூக அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறார். தனது படங்கள் மூலம் சமூக மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளார். சமீபத்தில் கூட அவர் நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் சமூகத்தில் ஒரு புரட்சியே உருவாக்கியது. 

அது மட்டுமில்லாமல் தனது அகரம் பவுண்டேஷன் மூலமாக ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்கி வருகிறார்‌. இந்நிலையில் சட்டம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் பெயரில் இயங்கும் Satyadev Law Academy- ஐ தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் இயக்குனராக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு செயல்பட உள்ளார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஷ், ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, நடிகர் சூர்யா, இயக்குனர் டிஜே ஞானவேல் ஆகியோர் பங்கேற்றனர்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள முதல்வர் முக ஸ்டாலின், சமூகத்தில் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு சாராருக்கு மட்டுமே சொந்தமல்ல என்று போராடி சமூகநீதி என்ற அடிப்படையில் உரிமைகளைப் பெற்றோம். 1961-ஆம் ஆண்டு வழக்கறிஞர் சட்டம் இயற்றப்பட்ட பிறகும், இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்ட பிறகுமே எளிய மக்களும் சட்டத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எளிய பின்புலங்களில் இருந்து வரும் அவர்களது திறன்களை வளர்க்க, ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. சந்துரு அவர்களை இயக்குநராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள #SathyadevLawAcademy-யைத் தொடங்கி வைத்தேன்.

இதில், ஏழை - எளிய மக்களின் கல்விக்காக உள்ளார்ந்த அக்கறையோடு தொடர்ச்சியாகச் செயல்பட்டுவரும் அன்புக்குரிய தம்பி சூர்யா அவர்களின் பங்களிப்பைப் பாராட்டுகிறேன். சட்டத்தொழிலும் மருத்துவத் தொழிலும் மற்ற தொழில்கள் போல் அல்ல. மற்றவை பணி புரிவது; இவை பயிற்சி செய்வது!

 

எனவே, நான் முதல்வன் திட்டத்தின்கீழ், மாணவர்களுக்கு இந்த அகாடமியின் மூலம் பயிற்சி அளிக்கக் கேட்டுக் கொண்டுள்ளேன்.நீதியரசர் திரு.சந்துரு அவர்களோடு, ஜெய் பீம் திரைப்படத்திற்குப் பிறகும் தொடர்ந்து சமூக அக்கறையோடு செயல்பட்டுவரும் தம்பி திரு.சூர்யா, இயக்குநர் திரு. @tjgnan ஆகியோருக்கு மீண்டுமொருமுறை வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.  ‌