×

வடிவேலுவின் தாயார் மரணம்... சோகத்தில் திரையுலகம் !

 

 நடிகர் வடிவேலுவின் தாயார் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் காமெடி நடிகராக இருப்பவர் நடிகர் வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். மதுரையை பூர்வீகமாக கொண்ட வடிவேலு, தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஆனால் மதுரை மாவட்டம் விரகனூரில் உள்ள வீட்டில் வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரி என்கிற பாப்பா மட்டும் வசித்து வந்தார். 

87 வயதாகும் வடிவேலுவின் தாயார் வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென வைத்தீஸ்வரி உயிரிழந்தார். அவரின் மரணம் வடிவேலு மற்றும் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

வடிவேலுவின் தாயார் வைத்தீஸ்வரியின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட இருக்கிறது. வடிவேலுவின் ரசிகர்களும், உறவினர்களும் வைத்தீஸ்வரியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுதவிர ஏராளமான திரையுலகினர் வடிவேலுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.