×

ரஜினி சாரை கூட்டிட்டு வரணும்... மயில்சாமியின் கடைசி ஆசை !

 

நடிகர் விவேக்கை போல் ரஜினி சாரை சிவன் கோவிலுக்கு கூட்டிட்டு வரணும் என மயில்சாமி ஆசைப்பட்டதாக டிரம்ஸ் சிவமணி தெரிவித்துள்ளார். 

தனது மிமிக்ரி திறமையால் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் காமெடி நடிகர் மயில்சாமி. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த அவர், 1965-ஆம் ஆண்டு பிறந்தவர். நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக செயற்பாட்டாளர் என பல பன்முகங்களை கொண்டவர். 

சென்னை சாலி கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சாலி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவரது இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என குடும்பத்தார் அறிவித்துள்ளனர். 

மயில்சாமி மறைவையொட்டி, நடிகர்கள் ரமேஷ் கண்ணா, மனோபாலா, டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இறுதி அஞ்சலிக்கு பிறகு பேசிய டிரம்ஸ் சிவமணி, 57 வயதாகும் மயில்சாமி, தீவிர சிவ பக்தர். அவர் கடைசியாக கூறியது என்னவென்றால், “கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு விவேக் சாரை கூட்டிட்டு வந்தேன்..நீங்களும் வந்துட்டீங்க, ரஜினி சாரை இந்த கோயிலுக்கு கூட்டிட்டு வந்து, அவர் கையாலே சிவனுக்கு பாலூத்த வைக்கணும்..’ இது தான் அவர் எங்கிட்ட நேரில் பேசிய கடைசி வார்த்தை..என்று உருக்கமாக கூறினார். 

இதற்கிடையே படம் ஒன்றிற்காக அவர் நேற்று பேசிய டப்பிங் காட்சி ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.