×

3 நாட்களில் வசூல் மழை... அசத்தும் தனுஷின் ‘வாத்தி’

 

 தனுஷின் ‘வாத்தி’ படம் 3 நாட்களில் மிகப்பெரிய வசூலை குவித்துள்ளது. 

கல்வி வியாபாரமாகிவிட்டதை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படத்தின் மூலம் தனுஷ் தெலுங்கில் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை  தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், கென் கருணாஸ், சமுத்திரக்கனி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை செவன் கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது.

கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியான இந்த படம் உலகம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதை போல் தெலுங்கிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’, விஜய்யின் ‘வாரிசு’ ஆகிய படங்கள் தெலுங்கில் பெரிய வரவேற்பை பெறாத நிலையில் இந்த படம் அங்கு சாதனை படைத்து வருகிறது. 

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் நல்ல வசூலை குவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முதல் நாளில் 5.44 கோடியும், அதற்கு இணையாக தெலுங்கில் 4.52 கோடியும் வசூலித்துள்ளது. அதேபோன்று கர்நாடகாவில் 1.25 கோடியும், கேரளாவில் 0.2 கோடியும், வெளிநாட்டில் 3.25 கோடியும் வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக முதல் நாளில் உலக அளவில் 14.85 கோடி வசூலித்திருந்தது. இந்நிலையில் ‘வாத்தி’ திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த படம் உலகம் முழுவதும் 3 நாளில் 51 கோடி வசூலித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.