×

மும்பையில் தமன்னா சொந்தமாக வாங்கிய அப்பார்ட்மெண்ட்-ஐ அடகு வைத்துள்ளாரா..?

 

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்தில் அறிமுகமானவர் தமன்னா. ரவிகிருஷ்ணா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் தமன்னாவின் அழகை பார்த்த தமிழ் திரையுலகம் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கியது. வெறும் அழகு மட்டுமின்றி தனக்கு திறமையும் இருக்கிறது என்பதை கல்லூரி படத்தின் மூலம் நிரூபித்தார் தமன்னா. இதனையடுத்து தமிழில் பிஸியாக வலம் வர ஆரம்பித்தார் அவர். அதன்படி விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டார். குறிப்பாக 2010ஆம் ஆண்டு மட்டும் அவர் மூன்று முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் தனது வெற்றிக்கொடியை நாட்டி ஜொலித்தார். இதனையடுத்து தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.

தமிழில் வாய்ப்புகள் குறைந்தாலும் பாலிவுட் அவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்திருக்கிறது. அங்கு அவர் நடித்த பப்ளி பவுன்ஸர், ப்ளான் ஏ ப்ளான் பி சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் டீசண்ட்டான வரவேற்பையே பெற்றது. சமீபத்தில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்களில் நடித்தார். அதேபோல் தெலுங்கிலும் அவர் பிஸியாகவே நடித்துவருகிறார். அதன்படி வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கரில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பாலிவுட் பக்கம் கரை ஒதுங்கிய தமன்னாவை நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். அந்தப் படத்தில் காவாலா என்ற ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தாலும் அந்தப் பாடலின் மூலம் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றார். அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கிப்போயினர் என்றுதான் சொல்ல வேண்டும். கடைசியாக அவரது நடிப்பில் தமிழில் அரண்மனை 4 படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது.

இந்நிலையில் தமன்னா குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது மும்பையில் தமன்னா சொந்தமாக வாங்கிய மூன்று அப்பார்ட்மெண்ட் வீடுகளை வங்கி ஒன்றில் 7 கோடி ரூபாய்க்கு அடகு வைத்திருப்பதாகவும்; தொடர்ந்து தனியார் நிறுவனத்திடமிருந்து வணிக வளாகம் ஒன்றை குத்தகைக்கு எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஐந்து வருடங்களுக்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கும் வணிக வளாகத்துக்கு மாதம் 18 லட்சம் ரூபாய் வாடகை என்றும்; ஐந்தாவது வருடத்தில் 20.96 லட்சம் ரூபாய் வாடகை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், இந்த இடத்துக்காக 72 லட்சத்தை முன்பணமாக கொடுத்திருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.