AI ஸ்டுடியோ தொடங்க உள்ள தயாரிப்பாளர் தில் ராஜு...
விஜய்யின் ’வாரிசு’ பட தயாரிப்பாளர் தில் ராஜு AI ஸ்டுடியோ ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவில் AI சம்பந்தப்பட்ட காட்சிகளை உருவாக்க வேண்டும் என்றால் அமெரிக்கா உட்பட வெளிநாடுகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலையில் இந்தியாவிலேயே சில AI நிறுவனங்கள் தோன்றி திரை உலகிற்கு சேவை செய்து வருகின்றன.ஏற்கனவே ஷாருக்கான் ரெட் சில்லி உள்பட ஒரு சில நிறுவனங்கள் டிஏஜிங் உள்பட பல VFX பணிகளை செய்து வரும் நிலையில் தற்போது விஜய்யின் ’வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு AI ஸ்டுடியோ ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து இனி AI சம்பந்தப்பட்ட காட்சிகளின் பணி இந்தியாவிலேயே நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: தில் ராஜூ ஒரு வித்தியாசமான பார்வையுடன் திரையுலகில் நுழைந்து மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களை அளித்தார். இப்போது, அவர் திரைப்படத்தை தாண்டி ஒரு முக்கிய முயற்சி எடுத்துள்ளார். எங்கள் பிளாக்பஸ்டர் தயாரிப்பாளர் தில்ராஜூ @QuantumAIGlobal உடன் இணைந்து AI நிறுவனத்தை அறிமுகப்படுத்துகிறார். மே 4-ஆம் தேதி பெயர் மற்றும் கூடுதல் விவரங்களை அறிவிப்போம் என கூறப்பட்டுள்ளது.