×

‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்: இயக்குநரும், நடிகருமான அமீர் கண்டனம்.

 

அகமதாபாத்தில் நடந்த இந்தியா- பாக்கிஸ்தான் ஆட்டத்தின் போது பாக்கிஸ்தான் வீரர் ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பிய போது அவருக்கு எதிராக ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டதற்கு நடிகரும், இயக்குநருமான அமீர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

கடந்த 13ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இந்தியா- பாக்கிஸ்தான் இடையிலான ஆட்டம் நடந்தது. அதில் முதலில் பேட்டிங் செய்த பாக்கிஸ்தான் அணி 192 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி போட்டியில் வெற்றி பெற்றது. இந்த நிலையில்  போட்டியில் நடந்த விஷயம் கடும் விவாதமாகி, சர்சையை கிளப்பியுள்ளது.

அதாவது அந்த போட்டியில் பக்கிஸ்தான் வீரர், முகமது ரிஸ்வான் அவுட்டாகி பெவிலியன் திரும்பிய போது அங்கிருந்த ரசிகர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது நடிகரும் இயக்குநருமான அமீர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில் “ கடந்த 10 ஆண்டுகளில் படித்த சமூகத்தை  எப்படி மடைமாற்றி வைத்திருக்கிறார்கள் அங்கு இருப்பவர்கள் படிக்காதவர்களோ, பாமர மக்களோ அல்ல எல்லாம் மேல் தட்டு மக்கள், அவர்களின் மூளைக்குள் எப்படி சொருகப்பட்டிருக்கிறது என்பது தான் இந்த சம்பவத்தில் வெளிப்பாடு” என பதிவிட்டுள்ளார்.