×

‘8 வருடமாக அஜித் சாரை சந்திக்க காத்திருக்கிறேன்‘ - உச்சக்கட்ட கோபத்தில் ‘பிரேமம்’ இயக்குனர் !

 

அஜித் சாரை சந்திக்க 8 ஆண்டுகளாக காத்திருப்பதாக ‘பிரேமம்’ இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். 

தமிழில் நிவின் பாலி நடிப்பில் வெளியான ‘நேரம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன்பிறகு மலையாளத்தில் உருவான ‘பிரேமம்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கினார். இந்த படம் இந்தியா முழுவதும் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து பிரத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘கோல்டு’ இயக்கினார். 

இந்நிலையில் உலகநாயகன் கமலை சந்தித்த புகைப்படம் ஒன்றை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த புகைப்படத்தின் கமெண்டில் ரசிகர் ஒருவர், தல அஜித்தை எப்போது படத்தை இயக்குவீர்கள் என்று கேட்டிருந்தார். 

இதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்திரன், அஜித் சாரை இதுவரை சந்திக்க முடியவில்லை. நடிகர் நிவின் மட்டும் ஒரு நாள் என்னிடம், அஜித் சாருக்கு ‘பிரேமம்’ படம் பிடித்துள்ளதாகவும், அதிலும் அந்த களிப்பு பாடல் மிகவும் பிடித்துள்ளதாகவும் கூறினார். இதையடுத்து அஜித் சாரை சந்திக்க அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவிடம் ஒரு பத்து முறை கேட்டிருப்பேன். ஆனால் 8 வருடங்களாகியும் என்னால் சந்திக்க முடியவில்லை. எனக்கு வயதாவதற்குள் சந்தித்துவிட்டால் அஜித்தை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன். 

ஒவ்வொரு முறையும் நீங்கள் இந்த கேள்வியை கேட்கும்போது எனக்கு எவ்வளவு வலிக்கும் தெரியுமா தம்பி ?. பலமுறை முயற்சி செய்து சோர்வடைந்து விட்டேன். நீங்கள் கேட்கும்போது முதலில் கோவம் வரும். இருப்பினும் நீங்களும் என்னை போன்று அஜித் ரசிகர் என்று நினைத்து அதை அமைதியாக கடந்து செல்வேன். அஜித் சாரை வைத்து படம் எடுத்தால் ஹாலிவுட், கோலிவுட் திரையரங்குகளில் 100 நாள் படம் ஓடும். இதே மாதிரி தான் கமல், ரஜினி, விஜய் ஆகியோருடனும் என குறிப்பிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்திரனின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.