×

மீண்டும் கிராமத்து பிண்ணனியில் ஒரு படம்...  நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா இயக்கும் படம் !

 

இயக்குனர் இமயம் பாரதிராஜா மீண்டும் படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் பாரதிராஜா. கிராமத்து மண்வாசனையில் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர். கடைசியாக அவரது மகனை வைத்து ‘தாஜ் மஹால்’, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய படங்கள் இயக்கினார். இந்த படங்கள் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. 

அதனால் திரைப்படங்களில் நடிகராக தோன்றிய அவர், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். தற்போது தங்கர் பச்சானின் ‘கருமேகங்கள் கலைகின்றன’, விஜய் சேதுபதியுடன் ஒரு படம், ‘நா நா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை பாரதிராஜா இயக்கவுள்ளார். ‘தாய்மெய்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகிறது. பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் தேனி பின்னணியில் உருவாகிறது. முதற்கட்ட பணிகள் நடைபெறும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.