“தெலுங்கு இயக்குநர், என நீங்கள் சொல்லும் போது வலிக்கிறது” – ‘வாரிசு’ வெற்றி கொண்டாட்டத்தில் கைகூப்பி நன்றி தெரிவித்த ‘வம்சி’.
விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்கங்களில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் தயாரான இந்த படம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற நிலையில் இன்று சென்னையின் படத்தின் வெற்றி கொண்டாட்டம் நடந்து வருகிறது, இந்த விழாவில் வம்சிகூறியதவது: “மறைந்த கலை இயக்குநர் சுனில் பாபுவுக்கு இந்தப் படத்தின் வெற்றியை சமர்ப்பிக்கிறேன். இது வெறும் படமல்ல விஜய், தில்ராஜு மற்றும் படக்குழு என் மீது வைத்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நிஜமாக்கிய தமிழ் மக்களுக்கு இருகரம் கூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
விஜய்யிடம் இந்தக் கதை கூறியபோது, ‘நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றுவேன்’ என சொன்னேன். என்னை பலரும் தெலுங்கு இயக்குநர், தெலுங்கு இயக்குநர் என கூறுவதுவலிக்கிறது. நான் தமிழ், தெலுங்கு ஆள் இல்லை. முதலில் நான் ஒரு மனிதன். பார்வையாளர்களின் வரவேற்பின் மூலம் என்னைச் சுற்றி வரையப்பட்டிருக்கும் அனைத்து எல்லைகளையும் கடக்க முயலும் மனிதன். மனதில் எனக்கு சிறிய இடமளித்த தமிழ் மக்களுக்கு நன்றி.
‘இது பக்கா தமிழ் படம்’ என்பதைத்தான் நான் முதலிலிருந்து கூறி வருகிறேன். விஜய் குறித்து நான் எவ்வளவு சொன்னாலும் போதாது. அவரிடம் ‘சார் நீங்கள் ஹேப்பியா?’ என கேட்டேன். அவர் ‘ஹேப்பி’ என்றார். அது போதும் எனக்கு. என் மீது நம்பிக்கை வைத்து இப்படம் கொடுத்ததற்கு நன்றி விஜய் சார். என் தந்தை படம் பார்த்து கண்ணீர்விட்டு என்னை கட்டி அனைத்துக்கொண்டார், அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம்” என தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் இயக்குநர் வம்சி.