×

ஆஸ்கர் வென்றார் பயில்வான் ரெங்கநாதன்... பிரபல இயக்குனர் சொன்ன தகவலால் குழப்பம் !

 

பிரபல நடிகர் பயில்வான் ரெங்கநாதன் ஆஸ்கர் வென்றதாக பிரபல இயக்குனர் கூறியுள்ளது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பயில்வான் ரெங்கநாதன். குணசித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற அவர், முந்தானை முடிச்சு, தர்மதுரை, ஜெய்ஹிந்த், தெனாலி, வில்லன், பகவதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஒரு குறுப்பிட்ட காலத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். 

தற்போது சினிமா பத்திரிக்கையாளராக வலம் வரும் அவர், இணையத்தள வாசிகளுக்கு மிகவும் பரிச்சயமானவர். ஏனென்றால் நடிகர், நடிகைகள் குறித்து அவர் சமூக வலைத்தளத்தில் கூறும் விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையாகி விடுகிறது. இதனால் அவர் மீது கடும் அதிருப்தியில் சினிமா துறையினர் உள்ளனர். 

இந்நிலையில் பயில்வான் ரெங்கநாதன் குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார். அதில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ‘இசை வெல்லம்’ பயில்வான் ரெங்கநாதன் சாரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள். எங்களுக்கு செம்ம பெருமையான தருணம். உங்கள் பணியின் மிகப்பெரிய ரசிகன் சார். மேலும் விபரங்களுக்கு நாளை மாலை 5 மணிக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பதிவை பார்க்கவும் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். எனினும் இது பயில்வான் ரெங்கநாதனை கலாய்க்கும் விதமான பதிவு என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.