நண்பர்களுக்கு நன்றி கூறி 'டிராகன்' இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு..!
‘டிராகன்’ படத்தில் வரும் பேச்சிலர் அறை காட்சிகள் தனது வாழ்க்கையில் நடந்தவை என குறிப்பிட்டு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வர், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தில் வரும் பேச்சிலர் அறை காட்சிகள் தனது வாழ்க்கையில் நடந்தவை என இயக்குனர் அஷ்வத் மாரித்து உருக்கமாக பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “நமது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவர்களுக்கு தனியாக நன்றி சொல்வதில்லை. ஏனென்றால் அவர்கள் நமது நண்பர்கள் என்பதால் தவறாக நினைக்க மாட்டார்கள் என நம்புகிறோம். ‘டிராகன்’ படத்தின் பேச்சிலர் ரூம் காட்சிகள் எனது வாழ்க்கையில் நடந்த 90% அப்படியே மறு உருவாக்கம் செய்யப்பட்டது. கதாபாத்திரங்கள் மட்டுமன்றி, அந்த இடமும் கூட.
முதல் 8 குறும்படங்களுக்கு இவர்கள் அனைவரும் ஒவ்வொரு தருணத்திலும் என்னுடன் இருந்தார்கள். எனது போன் உடைந்த போது, என்னை தொடர்பு கொள்ள இயலவில்லை என பாலாஜி புதிதாக போன் வாங்கிக் கொண்டு பார்க்க வந்தான். என் வாழ்க்கையில் இவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். எனது பெரும் ஒவ்வொரு வெற்றியையும் இவர்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.