×

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு... சோகத்தில் இசை உலகம் !

 

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார்.  அவரது மறைவு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற பாடகியாக இருந்தவர் வாணி ஜெயராம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என இந்தியாவின் பல மொழிகளில் பாடியுள்ளார். தனது இனிமையான குரலால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் 10,000 மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவரது குரலுக்கு மயங்காத ரசிகர்களே கிடையாது என்ற நிலை சினிமாவில் இருந்து வந்தது. 

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியில் வெளியான 'குட்டி' என்ற படத்தில் இடம்பெற்ற 'போலே ரே பப்பி ஹரா' என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகமானார். தமிழ் பாடகி ஒருவர் இந்தியில் முதல் பாடலிலேயே ரசிகர்களை மயக்க அடுத்தடுத்த வாய்ப்புகள் அங்கு குவிந்தனர். இதையடுத்து இந்தியில் பிரபலமான பாடகியாக மாறினார். தமிழில் அபூர்வ ராகங்கள் படத்தில் இடம்பெற்ற 'எழு ஸ்வரங்களுக்குள்', சங்கராபரணம் படத்தில் இடம்பெற்ற 'மானஸ ஸஞ்சரரே' ஆகிய பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை. 

அகில இந்திய அளவில் பிரபல அவர், பல தேசிய விருதுகளை பெற்றுள்ளார்‌. சமீபத்தில் கூட குடியரசு தின விழாவில் பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 'வாணி அம்மா' அனைவராலும் அழைக்கப்படும் வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் 78 வயதாகும் அவர், வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.