×

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ரசிகர்.. வீட்டிற்கே சென்று ஆறுதல் கூறிய கார்த்தி !

 

 மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ரசிகரின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் கார்த்தி ஆறுதல் கூறினார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்திக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்கள் மூலம் பல நலத்திட்ட உதவிகளை நடிகர் கார்த்தி செய்து வருகிறார். அந்த வகையில் திருவான்மியூர் பகுதியை சேர்ந்த வினோத், ரசிகர் மன்ற சார்பாக பல உதவிகளை செய்து வந்தார். 

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் தீவிர ரசிகராக இருந்த 29 வயது வினோத், கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டார். இதையறிந்த கார்த்தி படப்பிடிப்பு இருந்ததால் அந்த நேரத்தில் வர இயவில்லை. இதையடுத்து சென்னை திரும்பிய கார்த்தி, வினோத்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.  இது குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு பிறகு ‘ஜப்பான்’ படத்தில் நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். ‘குக்கூ’ படத்தை இயக்கிய ராஜூ முருகன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.