×

திரைவாழ்வில் கார்த்திக்கு 16 ஆண்டுகள் நிறைவு... ரீ ரிலீசாகும் ‘பருத்தி வீரன்’

 

 நடிகர் கார்த்தியின் 16 ஆண்டுகள் சினிமா பயணத்தையொட்டி ‘பருத்தி வீரன்’ திரைப்படம் மீண்டும் வெளியிடப்படுகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் கார்த்தி, முதன்முதலில் நடித்த படம் ‘பருத்தி வீரன்’. வித்தியாசமான கிராமத்து கதைக்களத்தில் வெளியான இந்த படத்தை அமீர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு, சம்பத்ராஜ், சுஜாதா சிவக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மிரட்டலாக இசையமைத்திருந்தார். 

கிராமத்தில் சுற்றி திரியும் போக்கிரியான பருத்தி வீரனின் கதைதான் இந்த படம். இதில் சாதி, காதல் என பல விஷயங்கள் காட்டப்பட்டிருக்கும். இறுதியாக தான் காதலித்த முத்தழகு உயிரிழப்பதற்கு எப்படி பருத்திவீரனே காரணமாகிறார் என்பதுதான் கதை. கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான இப்படம் 300 நாட்களை கடந்து திரையரங்கில் வெற்றிக்கரமாக ஓடியது. 

இந்நிலையில் நடிகர் கார்த்தி சினிமாவிற்கு வந்து 16 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதையொட்டி இப்படத்தை நாளை திரையரங்கில் வெளியிட படத்தை தயாரித்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது டிக்கெட் புக்கிங் ஆன்லைனில் நடைபெற்று வரும் நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.