×

‘கொட்டுக்காளி’ ஷூட்டிங்கை நிறைவு செய்த சூரி.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு !

 

‘கொட்டுக்காளி’ படத்தின் படப்பிடிப்பை நடிகர் சூரி நிறைவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னணி காமெடி நடிகராக சூரி, தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘விடுதலை’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சூரியின் நடிப்பு அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. அதனால் அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். 

அந்த வகையில் ‘விடுதலை’ படத்திற்கு நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இந்த படத்தில் ஹெலன், கும்பலாங்கி நைட், கப்பெல்லா ஆகிய படங்களில் நடித்த நடிகை ஆனா பென் கதாநாயகியாக நடித்து வருகிறார். பல சர்வதேச விருதுகளை பெற்ற ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய பி.எஸ். வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் சேவலை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாக உருவாகிறது. 

நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொக்‌ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவுபெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவுபெற்றதை சூரி மற்றும் படக்குழுவினர் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.